Sunday, 26 May 2024

கடிதங்கள்📝

கடிதங்கள்✉️..

எங்கோ, எதிலோ நீங்கள் படித்து கேட்ட வார்த்தை.
நாங்கள், காலச் சக்கரத்தில் மாட்டி கொஞ்சம் கொஞ்சமாக 
ம(டி)றைந்தவர்கள். 
ஆனால் நாங்கள் தாங்கி வந்த 
உணர்வுகள், என்றுமே உயிர்ப்புடன் இருக்கும்,.. 
அந்த உணர்வுகளை, நினைவுகளை பெட்டியில் பத்திரப்படுத்தி வைப்பர், 
இப்போது நினைவுகளை எல்லாம் தரவாக, தரவு மையங்களில் வைப்பது போல்📧. 

கடிதங்கள் என்றாலே, 
காதல் என்ற சொல் தான் நினைவுக்கு வரும்💌. 
நாங்கள் காதலை மட்டுமே 
கரைச் சேர்ப்பவர் இல்லை,
பலரின் கனவுகளையும், 
கருத்துக்களையும், கரைச் சேர்த்திருக்கிறோம்📜. 
சிலரின் கண்ணீரைத் துடைத்திருக்கிறோம். 

கடிதங்களை எழுதும் போதும்📝, 
படிக்கும் போதும், 
சிலர் புன்னகைப்பர்😊, 
சிலர் கண் கலங்குவர்😪, 
சிலர் ஆர்பரிப்பர்😁, 
சிலர் வருந்துவர்😔. 

உறவுகளின் பாலமாய் இருந்தோம்🤝. 
சிலரின் கோபம் கூட, நாங்கள் தாங்கி வந்த எழுத்துக்களைப் படிக்கும் போது பறந்து போகும்💌. 
எழுதி விட்டு, அனுப்பாமல் அடைகாத்த கடிதங்களும் உண்டு💌. 

நாங்கள் வெறும் காகிதம் தான்,
எங்கள் மேல் "மை" விழாத வரை. 
நாங்கள் பறக்க தயாராகி விடுவோம், 
சிறு சோற்று பசையுடன், அஞ்சல் முகவரி எழுதிவிட்டால். 

நாங்கள் இன்றும் இயங்குகிறோம், 
அலுவலக கடிதங்களாய். 📨

No comments:

Post a Comment